×

டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்லி மற்றும் நொய்டாவில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் நொய்டாவில் நேற்று காலை100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக பெற்றோர்கள் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், குழந்தைகள் அவசர அவசரமாக பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பள்ளிகளுக்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில் அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை துணை ஆணையர் மல்ஹோத்ரா,‘‘ வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ரயில் நிலையங்கள்,மெட்ரோ நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினரும் விழிப்பாக இருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி டிவிட்டரில் பதிவிடுகையில், இன்று (நேற்று) காலை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் சோதனை செய்தனர். இதுவரை எந்த பள்ளிகளிலும் எதுவும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து மிரட்டல்
ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரே ஐபி முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Noida ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20 தொடர்; டெல்லியை வீழ்த்தி...